உடலுக்கு எது நல்லது எது கெட்டது என பார்த்துப் பார்த்து சாப்பிட்ட காலம் மாறிப்போய், தற்போது எந்த உணவில் நிறைய சுவை உள்ளது, எந்த உணவில் அதிக நிறம் இருக்கிறது என பார்த்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. அப்படி சுவையுடன் சாப்பிடும் உணவுகளில் என்னென்ன கலவைகள் கலந்துள்ளன என்பதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நாக்கிற்கு சுவை இருந்தால் மட்டும் போதுமென்று தற்போதைய இளைய தலைமுறையினர் பல உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் நாளடைவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு காலம் முழுவதும் மருந்து, மாத்திரைகளுடன் வாழக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆசைக்காக ஏதோ ஒருநாள் சாப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு கெடுதல் உண்டாக்கக்கூடிய உணவுப் பொருட்களை தினந்தோறும் தேடிப் பிடித்து சாப்பிட்டு வருவது அவர்களுக்கு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மாத்திரையை போட்டுக்கொண்டு மீண்டும் இனிப்பை தேடிச் செல்லும் சர்க்கரை நோயாளிகள் போல தற்போதைய இளம் தலைமுறையினர் மாறிவிட்டனர். அதுவும் மாலை நேரத்தில் அவர்கள் தேடிப் பிடித்து சாப்பிடும் சிற்றுண்டி உணவுகளை கண்டாலே பயமுறுத்தும் வகையில் உள்ளன.
பெரும்பாலும் மாலை வேளையில் வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வந்த நம் மக்கள் தற்போது சாண்ட்விச், கட்லட், பாவுபஜ்ஜி, பேல் பூரி, பானிபூரி போன்ற வடநாட்டு உணவுப் பொருட்களை நிறைய வாங்கிச் சாப்பிட தொடங்கி விட்டனர். இதன் விளைவால் வடநாட்டில் இருந்து திரளானோர் தொழில் செய்ய சென்னை போன்ற பெரு நகரங்களை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டனர்.
அவர்கள், சென்னைக்கு போய் பானி பூரி கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என அசாதாரணமாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஏனென்றால் மாலை வேளையில் ஒவ்வொரு பானிபூரி கடையின் முன்பு கையில் தட்டு வைத்துக்கொண்டு நம்மவர்கள் கையேந்தி கொண்டு நிறப்பதும், ஒரு பூரியை எடுத்து அதை ஒரு திரவத்துக்குள் முக்கி எடுத்து அதனுள் சிறிது வெங்காயத்தை போட்டு அப்படியே வாயினுள் போட்டு மெய்மறந்து சாப்பிடுவதும் தினமும் நாம் பார்க்கும் காட்சிகளில் ஒன்று.
அப்படி அந்த பானிபூரியில் என்னதான் உள்ளது, அதை எவ்வாறு தயாரிக்கிறார்கள், அதை செய்து கொடுப்பவர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார்கள், இதை சாப்பிடுவதால் எந்த நன்மைகள் நமது உடலில் ஏற்படும், அல்லது எது மாதிரியான நோய்கள் நமக்கு வந்து சேரும் என எதையும்அறிந்து கொள்ளாமல் அப்படியே சாப்பிட்டு விட்டு கித்னா ருப்பியா பையா என கேட்டு பணத்தை கொடுத்து விட்டுச் செல்லும் சூழ்நிலையில்தான் தற்போது நம் மக்கள் இறுக்கின்றனர்.
எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட எடுத்துக் கொண்டாலும் அந்த உணவின் நன்மை தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிலும் காலத்திற்கு தகுந்தவாறு எந்த உணவுகளை எவ்வாறு சாப்பிட வேண்டும், எந்த சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிட வேண்டும் போன்ற பல விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் மறந்து விட்டு தற்போது சுவை மற்றும் நிறத்திற்கு மயங்கி நாம் நமது ஆரோக்கியத்தை பாழ்படுத்தி வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் சென்னையில் ஒவ்வொரு பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் சேரும் பகுதிகளில் நாம் கண்கூடாக ஒரு பானிபூரி கடையை பார்க்கலாம். சாதாரணமாக ஒரு சின்ன வண்டியில் பானிபூரி பாக்கெட்டுகளை அந்த வண்டியை சுற்றிலும் தொங்கவிட்டு ஒரு குவளை அல்லது ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி வட மாநிலத்தவர்கள் வியாபாரம் செய்து வருவதை பார்க்கிறோம்.
இந்த பானிபூரியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், இது ஒரு வட மாநில சிற்றுண்டி உணவு வகையைச் சேர்ந்த பொருளாகும். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். இந்தியாவில் இந்த பானிபூரி பூரி கலாச்சாரம் முதன் முதலில் தெற்கு பீகார் பகுதியில் தோன்றியது என சொல்கிறார்கள். இதனை அந்த பகுதியில் கோல் கப்பா என்ற பெயரில் அழைப்பார்கள்.
நேபாளம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் பானிபூரி என அழைக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு இதற்கு பல்வேறு பெயர்களை வைத்து கொள்கிறார்கள். பூரியை செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், எண்ணெய், உப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். பானியை தயாரிக்க புளி, புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகத்தூள், வெல்லம் இவைகளை பயன்படுத்துகிறார்கள்.
அதற்குள் வைக்கும் மசாலாவை செய்வதற்கு உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் சில மசாலா பொருட்களை பயன்படுத்துகின்றனர். மசாலா உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதில் சீரகத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தேவையான அந்த பூரியை உடைத்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடைத்து அதை பானி என்று சொல்லப்படும் தண்ணீரில் முக்கி அந்த ஓட்டைக்குள் தண்ணீர் இருக்கும் படி கொடுக்கிறார்கள்.
இதில் காரம் மற்றும் புளிப்பு சேர்ந்த ஒரு கலவை சுவையாக நமக்கு கிடைக்கிறது. தற்போது சுவைக்காக பானிபூரியில் தயிர் போன்ற பல்வேறு விஷயங்களை கலந்து கொடுக்கிறார்கள். இந்த பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியாக தயாரிப்பதில்லை. அந்த பூரிகளை மொத்தமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். இவர்கள் அந்த பூரிகளை எந்த எண்ணெயில் தயாரிக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதில் மைதா மாவு கலந்துள்ளதால் நிஜ்ஜயமாக அது உடலுக்கு பல்வேறு தொல்லைகளை உண்டாக்கும்.
பெரும்பாலும் கடைக்காரர்கள் பூரியை தங்கள் விரல்களால் தான் உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கும்போது அவர்களின் கை எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களது நகத்தில் இருக்கும் அழுக்குகள், மேலும் கையிலுள்ள அழுக்குகள் பானியில் கண்டிப்பாக ஒட்டிக் கொள்ளும். எனவே நாம் முடிந்த அளவு கடைக்காரர்கள் வெறும் கைகளால் பூரியை உடைக்க அனுமதிக்க கூடாது.
சுத்தமில்லாமல் பரிமாறப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் வயிற்றில் புழுக்களை உற்பத்தி செய்து அது பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்திவிடும். மேலும் கடைக்காரர்களுக்கு வேறு விதமான கொடிய நோய்கள் இருந்திருந்தால் அதுவும் நம்மை தொற்றிக் கொள்ளும் அபாய சூழ்நிலையும் இருக்கிறது. மேலும் பானையில் இருக்கும் தண்ணீர் சுகாதாரத்தன்மை உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். பல்வேறு இடங்களில் மொத்தமாக அடர்த்தியான கலவைகளாக பானியை செய்து கொண்டு வந்து, அது தீரத்தீர அதில் அருகில் இருக்கும் இடங்களில் தண்ணீரை சேமித்து விற்று வருகின்றனர்.
மேலும் அதில் சேர்க்கும் புளி, கொத்தமல்லி, சீரகம் போன்றவை நல்லமுறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது இவைகளில் சுவைகள் உண்டாக இது போன்ற பொருட்களை தனித்தனியாக பயன்படுத்தாமல் மொத்தமாக பானி மசாலா என்கிற மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் சுவைக்கென்று அதிகப்படியான மசாலா பொருட்கள் கலக்கப்படுவதால் அது பல்வேறு பிரச்சனைகளை உண்டாகும்
மேலும் குறிப்பிட்ட அந்த மசாலாவை தயாரிக்கும் போது சுத்தமாக செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது. எனவே பானிபூரி விஷயத்தில் மூன்று இடங்களில் அதிகளவில் தவறுகள் உண்டாகின்றன. எனவே பொதுமக்கள் பானி பூரி சாப்பிடும்போது முதலில் அந்த கடை எந்த இடத்தில் உள்ளது, சுத்தமாக இருக்கிறதா, சுகாதாரமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். தெருவோரக்கடைகள், குப்பைத்தொட்டி ஓரம், சாக்கடை ஓரம் கடைகள் இருந்தால் கண்டிப்பாக அந்த கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் கையுறை பயன்படுத்தாமல் கடைக்காரர் பானிபூரி உடைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் பானிபூரியை எடுத்து அவர்களது பானையில் நனைத்து கொடுக்கும் படி சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு சிறிய பாத்திரத்தில் பானியை வாங்கி நாமே அதை ஊற்றி சாப்பிடலாம். மேலும் மசாலா கலவைகள் மிகவும் காரமாக, புளிப்பாக இருக்கக் கூடாது.
இவற்றையும் மக்கள் உற்று கவனிக்க வேண்டும். முடிந்தவரை எப்போதாவது ஒருநாள் சாப்பிட்டால் தவறு இல்லை. ஆனால் இதை தினந்தோறும்சாப்பிடுவதால் கண்டிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளும், தொற்றுநோய்களும் கண்டிப்பாக வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே காசு கொடுத்து நோயை வாங்குகின்ற நிலையை மாற்றி மக்கள் சத்தான பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
மாலை நேர ஸ்நாக்ஸ்
ஒரு பொருளுக்கு வரவேற்பு இல்லை என்றால் கண்டிப்பாக இதை இத்தனை பேர் வியாபாரம் செய்ய மாட்டார்கள். அந்த அளவிற்கு வியாபாரம் இருப்பதால்தான் வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் இங்கு வந்து தங்களது பொருட்களை வியாபாரம் செய்கின்றனர். அந்த அளவிற்கு நம்மூர் வடை,போண்டா, பஜ்ஜி மற்றும் சிற்றுண்டி வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நம்மவர்களுக்கு அலுத்து போய்விட்டது. இதன் காரணமாக வட மாநில உணவுப்பொருட்களை தேடிப் பிடித்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் அதிகளவில் இந்த பானி பூரியை வாங்கி சாப்பிடுகின்றனர்.
ரசாயனங்கள் அதிகம்
கோதுமையில் இருக்கும் நார் சத்துகளை அகற்றி தான் மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. மைதா மாவு மிருதுவாக இருக்க அலொக்ஸன் என்ற ரசாயனம் அதிகம் சேர்க்கப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.இதனால் ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ரசாயனத்தால் செரிமான பிரச்சனைகள், எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதேபோல் மைதாவின் வெண்மை நிறத்திற்காக பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது ஜவுளி துறையில் துணிகளை வெண்மையாக்க உபயோகப்படுத்தப்படும் ரசாயனமாகும். மேலும் இது மருத்துவ தேவைக்காகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி மைதாவால் பூரிகளை தயாரிக்கின்றனர். இதனால் இவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.