சென்னையில் செய்தியாளர்களை மே 28ம் தேதி சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி கூட்டணி மற்றும் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மே 28ம் தேதி உலகம் முழுவதும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தமிழகம் முழுவதும் மே 28 ம் தேதி மதிய உணவு வழங்க தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்னதானம் வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மே 28ம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தவெக உறுப்பினர்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டது .
இதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் உணவுப்பொருட்கள் வீணாகும் அதை தடுக்க சம்பந்தப்பட்ட மண்டபங்களுடன் தொடர்பு கொண்டு மீதமாகும் உணவுகளை சேகரித்து வீணாகாமல் அருகிலுள்ள காப்பகங்களுக்கு கொடுக்க தவெக தொண்டர்களுக்கு வலியுறுத்தினோம். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிகழ்வாக உலக பட்டினி தினத்தை ஒட்டி 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது .
விஜய் அவர்களின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமர்சையுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவது பற்றிய அறிவிப்பை தவெக தலைவர் விஜய் அவர்களே முடிவெடுப்பார், அவர் எடுக்கக்கூடிய முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம், அதை தொடர்ந்து செயலாற்றுவோம்” என்றார்.
மேலும், சென்ற ஆண்டைப் போலவே நடப்பாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஒரு சில குளறுபடிகள் உண்டானது, இந்த வருடத்தில் ஒருவர் கூட விடாமல் மாணவர்களை அடையாளம் காணும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேதி அறிவிக்கப்படும் விஜய் அவர்களே நேரடியாக மாணவ, மனைவி செல்வங்களுக்கு விருது வழங்குவார் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், அரசியல் தொடர்பான எந்த கருத்தாக இருந்தாலும் தவெக தலைவர் விஜய் தெரிவிப்பார் என கூறினார்.