பிரேமம் படம் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் ஆச்சு. இன்றளவும் மக்கள் அந்தப் படத்தை கொண்டாடிட்டுதான் இருக்காங்க. அதுக்கு முக்கியமான காரணம், அதுல வந்த கதாபாத்திரம், கதைல இருந்த நாஸ்டால்ஜியா டச். ஆனால், இதுல ஒண்ணு பார்த்தீங்களா? பிரேமம் படத்துல வந்த மற்ற ரோல்களை விட சாய் பல்லவி இன்றளவும் அதிகளவில் சவுத் இந்தியா முழுவதும் பேசப்பட்டுட்டு தான் இருக்காங்க.
Sai Pallavis quality four incidents
மலர் டீச்சரா, பானுமதியா, ஆனந்தியா, கீதா குமாரியா மற்றும் ரோஸியா இன்றளவும் பலரோட மனசுல இருக்காங்க. இதுக்கு படம் மட்டுமே காரணம் இல்லைனு கருதுகிறேன். சாய் பல்லவி ஆஃப் ஸ்கிரீன்ல பேசுற விஷயங்களும் காரணம்னு கூறலாம். சமீபத்துல காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு எதிரா சாய் பல்லவி பேசி பா.ஜ.க-வை வைச்சு செய்த வீடியோவானது செம ட்ரெண்டிங்கா சோஷியல் மீடியால போய்ட்டு இருக்கு. என்னத்தான் அவங்க பேசுனாங்க? வேற என்ன தரமான சம்பவங்கள் எல்லாம் சாய் பல்லவி செஞ்சிருக்காங்க. அதைத்தான் நாம இந்த பதிவில் பார்க்கப்போறோம்.
காஷ்மீர் ஃபைல்ஸ் விமர்சனம்!
ராணா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடிச்ச ‘விரடா பர்வம்’ அப்டின்ற படம் வெளியாக ஆகப்போகுது. அதுக்காக புரோமஷன் பணிகள்ல அந்த டீம் வேலை பார்த்துட்டு இருக்காங்க. சாய் பல்லவியும் இண்டர்வியூலாம் கொடுத்துக்கிட்டு வறாங்க. அப்படி ஒரு இண்டர்வியூல சாய் பல்லவியிடம் “நீங்க இடதுசாரி சிந்தனைகளால ஈர்க்கப்பட்டவரா?”னு கேள்விய கேட்டாங்க.
அதுக்கு சாய் பல்லவி பதில் கூறியபோது, “நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். நல்ல மனிதரா இருக்க வேண்டுமென்று எனக்கு கத்துக்கொடுத்துருக்காங்க. இடதுசாரி மற்றும் வலதுசாரி என இரண்டையும் கேள்விபட்டிருக்கேன். ஆனால், எது சரி, எது தவறு என்று எப்பவும் நம்மால ஒரு முடிவுக்கு வர முடியாது.
சமீபத்துல ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்துல பண்டிட்டுகள் எப்படி கொல்லப்படுறாங்கனு காட்டுறாங்க. ஆனால், சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. பசுவை வண்டியில கொண்டுபோன ஒருத்தரை இஸ்லாமியர் என்று கருதி கூட்டமா சேர்ந்து அவரை அடிக்கிறாங்க. அப்புறம் ‘ஜெய் ஸ்ரீராம்’னு முழக்கமிடுறாங்க.
காஷ்மீர்ல அப்போது நடந்ததுக்கும் இப்போது நடந்துட்டு இருக்குறதுக்கும் என்ன வேறுபாடு? நீங்க நல்லவரா இல்லைனா இடது சாரியா இருந்தாலும் வலது சாரியா இருந்தாலும் எந்த பயனும் இல்லை. நான் எப்பொழுதும் நடுநிலையானவள்தான். மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி மக்களை தாக்குவது தப்பு. சரிசமமாக உள்ளவங்களுக்கு இடையில்தான் போட்டு இருக்கணும்”னு பேசியிருப்பாங்க.
இந்தியாவில் பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் பசுக்களை கொண்டு செல்பவர்களை இஸ்லாமியர்கள் எனக்கருதி அடித்து கொல்லும் சம்பவம் நிறைய நடந்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் பசுவதை தடுப்புச்சட்டமும் அமலில் இருக்குது. அதுமட்டுமின்றி, மற்றொரு பக்கம், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் சோசியல் மீடியாவில் ஆக்கிரமித்துள்ளன. உத்திரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத்னு பல மாநிலங்கள்ல இந்தப் படத்தைப் பார்க்குறதுக்கு வரிவிலக்கு செஞ்சிருக்காங்க.
மத்தியப் பிரதேசத்துல இந்தப் படத்தை காவல்துறைக்காரங்க பார்க்க ஒருநாள் விடுப்பு கொடுத்தாங்க. இப்படியான சூழல் உள்ள போது பசுவின் பெயரை சொல்லி தாக்குறதுக்கு எதிராகவும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு எதிராகவும் சாய் பல்லவி பேசிய கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனினும், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
எல்லாரும் அழகுதான் எப்பவும்!
சாய் பல்லவி எப்பவும் எல்லாருமே அழகுதான்னு சொல்லக்கூடிய ஒரு ஆள். அந்த முடிவுக்கு அவங்க வர்றதுக்கு முன்னாடி சந்திச்ச அவமானங்கள் நிறைய என சொல்லலாம். சாய் பல்லவி ஒரு இண்டர்வியூல பேசும்போது, “நான் வீட்டைவிட்டு வெளிய போய் யாரையாவது பார்க்க சென்றால் அவங்க என்னோட கண்ணைப் பார்த்து பேசமாட்டாங்க. என் முகத்துல உள்ள பிம்பிள்ஸ்தான் பார்ப்பாங்க. அதனால, வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்”னு சொல்லி இருப்பாங்க.
ஆனால், ஒருகட்டத்துல அதை அவங்க அக்ஸப்ட் செஞ்சிக்கிட்டாங்க. இதுதான் இயற்கை. நம்மோட நேச்சர் இதுதான்னு புரிஞ்சிக்கிட்டாங்க. மக்கள் அவங்களை அப்படியே ஏத்துக்கிட்டதுக்கும் அவங்க அவங்களாவே முகத்துல உள்ள பருக்களோட நடிச்சதுதான் காரணம். சாய் பல்லவி வந்ததுக்கு பிறகு தான் உண்மையிலேயே பருக்கள் எல்லாம் அழகுதான், இயற்கைதான்னு அதிக பேர் உணர்ந்து கான்ஃபிடன்ட்சோட வெளிய வர ஆரம்பிச்சாங்க. முகத்துல கிரீம் போடுறதுக்கு எதிராலாம் சோஷியல் மீடியால அதிகம் பேசுனாங்க.
ஜார்ஜியால அவங்க படிக்கும்போது அங்க படிக்கிறவங்க எல்லாருமே மிகவும் அழகா வொயிட்டா இருப்பாங்களாம். இவங்க முகத்துல பருக்களோட இருந்ததுனால தாழ்வு மனப்பான்மையோட இருந்துருக்காங்க. இந்தியாவுக்கு வந்ததும் பிரேமம் படத்துல நடிக்க அல்போன்ஸ் அவரை செலக்ட் செஞ்சிருக்காரு. நிறைய ஹேப்பியா ஃபீல் பண்ணியிருக்காங்க. “பிரேமம்க்கு முன்னாடி நிறைய கிரீம்ஸ் நான் பயன்படுத்தி இருக்கேன். படம் ரிலீஸ் ஆகும்போது சிம்ரன் மாதிரியோ, திரிஷா மாதிரியோ நான் இல்லைனு கிண்டல் செய்வாங்கனு நினைச்சேன்.
ஆனால், ட்வீட்ஸ்லாம் பார்த்து மிகவும் சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு என்மேல கான்ஃபிடண்ட் வந்துச்சு. படங்கள்ல நடிக்கும்போதும் அதிகமா மேக்கப் போடாமல்தான் நடிப்பேன். எல்லாருமே அவங்க எப்படி இருக்கிறாங்களோ அந்த வகையில அவங்க அழகுதான். சாய்பல்லவி அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுங்க”னு சொல்லுவாங்க. ஒருவேளை சாய் பல்லவி பிரேமம் படம் மூலமா அதுவரைக்கும் இருந்த அழகு குறித்த விஷயங்களை உடைக்கலைனா இன்னைக்கும் பல பேர் அந்த இன்செக்யூரிட்டியால வெளிய வராமலும் இருந்துருக்கலாம்.
ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் வந்தப்ப சாய் பல்லவியை குறித்து ஷோஷியல் மீடியால ஒருத்தர், “சாய் பல்லவியின் உதடு சரியில்லை. மூக்குப் பெருசா இருக்கு. ஒரு நடிகைக்கான எந்த அம்சமும் சாய் பல்லவியிடம் இல்லை”னு மிகவும் தரைக்குறைவா விமர்சனம் எழுதியிருந்தாரு. இதுக்கு சாய் பல்லவி தரப்பிலிருந்து பெருசா எந்த எதிர்வினையும் வரலை. அதை கடந்து அமைதியா போய்ட்டாங்க.
ஆனால், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இதை பற்றி உருக்கமா ஒரு பதிலடி கொடுத்தாங்க. “என்னையும் உருவ கேலி செஞ்சி பயங்கரமா கிண்டல் செஞ்சிருக்காங்க. நான் அதை துணிச்சலோட எதிர்கொண்டேன். உருவ கேலியால மனசு எவ்வளவு காயம் உண்டாகுமுன்னு எனக்கு தெரியும். அதை திறமையாலும் உழைப்பாலும் ஆற்றினேன். பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம், அவர்கள் வேகத்தை இது போல கிண்டல் பண்ணி தடுக்குறாங்க. சாய் பல்லவி மீதான உருவகேலியும் அது போன்றது தான் என செமயான பதிலடி கொடுத்தாங்க.
விளம்பரங்களுக்கு நோ
படங்கள்ல மேக்கப்புக்கு நோ சொல்றது போல ஃபேர்னஸ் விளம்பரத்திற்கும் சாய் பல்லவி நோதான் சொல்லுவாங்க. ஏன் அப்படின்னு அவங்கக்கிட்ட கேட்டா, “எனக்கு தெரிஞ்ச சர்க்கிள் என்னோட ஃபேமிலி மட்டும் தான். பூஜாக்கு, பல்லவி என்னைவிட அழகா இருக்கானு ஒரு காம்ப்ளெக்ஸ் எப்பவும் உண்டு. கண்ணாடி முன்னாடி நாங்க 2 பேரும் நின்னா என்னையும் அவளையும் கம்பேர் பண்ணுவா. பூஜா நீ வெள்ளையாகணும்னா ஃப்ரூட்ஸ், விஜிடபிள்ஸ் சாப்பிடுனு சொன்னேன். அவ சாப்பிட்டா. ஆனால், அவளுக்கு அது புடிக்காது. எனக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு.
என்னைவிட ஐந்து வயசு சின்ன பொண்ணுக்கு எவ்வளவு இம்பேக்ட் கிரியேட் செய்வோம்னு தோணிச்சு. விளம்பரங்கள்ல இருந்து வர்ற பணத்தால 3 சப்பாத்தி இல்லைனா கொஞ்சம் ரைஸ் சாப்பிடுவேன். கார்ல சுத்துவேன். அவ்வளவுதான். ஆனால், என்னை சுத்தி உள்ளவங்கள சந்தோஷமா வைச்சிருக்குறது எனக்கு முக்கியம். ஒவ்வொரு நாட்டுலயும் வெவ்வேறு நிறத்துல இருக்காங்க. அதையெல்லாம் நாம குறை கூற முடியாது. அதனாலதான் வேண்டாம் என்று சொன்னேன்”னு சொல்லுவாங்க.
நீட் எதுக்கு பாஸ்?
இந்தியால நீட் தேர்வு கொண்டு வந்ததிலிருந்து மாணவர்களின் தற்கொலைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்துட்டு வருது. இதற்கு எதிரா திரைத்துறையிருந்து பெரிய குரல்கள் வெளியே வரலை. ஆனால், இதுதொடர்பா குரல் கொடுத்தாங்க சாய் பல்லவி . நுழைவுத் தேர்வு மருத்துவ படிப்புக்கு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிப்படைய செய்யும்.
அதனால் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களுக்கு தைரியத்தை சொல்ல வேண்டும். நீட் தேர்வால் எனது குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்துள்ளது. எனக்கும் மாணவர்களது வலி புரியும்”னு நீட் தேர்வுக்கு எதிராக கருத்து சொல்லியிருப்பாங்க. இதுக்கு எதிராகவும் பயங்கரமா விமர்சிக்கப்பட்டாங்க சாய் பல்லவி.
சாய் பல்லவி வெறும் நடிகைகள்ல ஒருத்தராக இருந்து கடந்து செல்லாமல், சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியானது. தொடர்ந்து அவரின் குரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று ஒலிக்கணும் என்பதே ஆசை.