இந்திய ஆண்கள் கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளர்கள் பதவிக்கு சுமார் 3,000-க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து கொண்டிருக்கிறார். அவரது பதவிக்காலம் 2024, டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவு பெறுகிறது. இதனையடுத்து பிசிசிஐ இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்து இதற்கான அறிவிப்பை மே 13-ம் தேதி அன்று வெளியிட்டது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் கூகுள் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. தற்போதைய பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் விருப்பப்பட்டால் மீண்டும் அவர் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் ராகுல் டிராவிட் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய விரும்புவதாகவும். மீண்டும் அவர் தலைமை பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை என தகவல் வெளியானது. இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய மே 27 கடைசி தேதி என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர்கள் பதவிகென்று சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.
ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேல் சொன்னது போல் நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான் என்ற ரகத்தில் நிறைய விண்ணப்பங்கள் தான் வந்து குவிந்து கிடக்கின்றன. ரசிகர்கள் சிலர் தங்களது பிடித்த கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பெயரில் போலியான விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை பெற்று தந்த மகேந்திர சிங் தோனியின் பெயரும் இதில் அடங்கி உள்ளது. மகேந்திர சிங் தோனி மட்டுமில்லாமல் இந்திய பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா , பாலிவுட் கிங் ஷாருக்கான் உள்ளிட்டோர் பெயரில் போலியான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பிசிசிஐ-க்கு இப்படியான விண்ணப்பங்கள் வருவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. சென்ற முறையும் இதே கதை தான்.
அதே போல முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்ஷ்மன், கவுதம் கம்பீர், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்றோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.