பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்களும் ஒலிம்பிக் நடைபெறும் பாரிஸில் இருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருக்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து சரிவர வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என வீரர்கள் குற்றம் சாட்டி வருகிகிறார்கள். விளையாட்டு வீரர்கள் தங்கி உள்ள இடத்தில் இருந்து ஸ்டேடியத்திற்கு போக வீரர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ஏசி கிடையாது, ஸ்டேடியத்திற்கு போக 45 நிமிடங்கள் ஆகிறது. அதற்குள் உடல் சோர்வு வந்துவிடுகிறது என புகார்கள் கிளம்பியது. தற்போது மற்றொரு விஷயமும் பயங்கரமாக வெடித்துள்ளது.
என்ன பிரச்சனை..?
அமெரிக்க வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போதிய வசதிகள் இல்லை என்று அங்கிருந்து வெளியேறி தற்போது ஹோட்டலில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில விளையாட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் அறைகள் மிகவும் சிறியதாக இருக்கிறது என சொல்லி, ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் கோகோ கஃப் டிக்டாக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்த 7 வினாடி வீடியோவில், கோகோ தங்கியிருந்த ரூமை காட்டுகிறார். அந்த அறை மிகவும் சிறிய அறையாக இருந்த நிலையில், இங்கு என்னுடன் 10 வீராங்கனைகள் தங்கி இருந்ததாகவும், 2 குளியலறைகள் மட்டும் இருந்ததாகவும் கூறினார். அந்த வீடியோவில் அவர், “என்னைத் தவிர அனைத்து டென்னிஸ் வீராங்கனைகளும் ஒரு ஹோட்டலுக்கு மாறினர். எனவே இப்போது 2 குளியலறைகளில் 5 பெண்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம்” என கூறினார்.
மேலும் சில பிரச்சனைகள்..
- பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் 3,500 இருக்கைகள் கொண்ட உட்காரும் இடத்தில் ஏறத்தாழ 15,000 பேர் உணவருந்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.
- ஜப்பான் நாட்டை சேர்ந்த ரக்பி செவன்ஸ் வீரர் ஒருவர், ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் இருக்கும் அவர் தங்கியிருந்த அறையில் திருமண மோதிரம், நெக்லஸ் மற்றும் பணம் வைத்திருந்தபோது, யாரோ அவற்றை திருடி சென்றனர். இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்திய மதிப்பில் அதன் விலை சுமார் ரூ.2,70,000 என்று சொல்லப்படுகிறது.
- ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஒருவர் கிரெடிட் கார்டு திருட்டு போனதாக காவல்துறையில் புகார் கொடுத்தார்.
- முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில் நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் பற்றி அர்ஜென்டினா வீரர்கள் புகார் தெரிவித்தனர்.
- இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் டென்னிஸ் வீரர் சுமித் நாகல், ”தூங்குவது முதல் உணவு, பேருந்து என யாருக்கும் போதிய வசதி செய்து கொடுக்கவில்லை. வீரர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்” என கூறினார்.