கவுதம் காம்பீரை அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் விரைவில் ஓய்வு பெறபோகும் நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நபர்களை நியமனம் செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ‘இந்திய சுவர்’ என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் செயல்பட்டு கொண்டுள்ளார். அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என பிசிசிஐ அறிவித்தது.
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்ப மே 27 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. நேர்காணல் முடிந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் டீமின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொள்வார்.
யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கென்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரிடம் பிசிசிஐ பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிபடுத்திய பாண்டிங், தன்னிடம் பேசப்பட்டதாகவும் ஆனால் தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார். ஏற்கனவே இந்திய அணிக்கு ஜான் ரைட், கேரி கிர்ஸ்டியன் மற்றும் டன்கன் ஃபிளெட்சர் ஆகிய வெளிநாட்டினர் பயிற்சியாளர்களாக செயல்பட்டு வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
கவுதம் காம்பீர்:
இதனிடையே கவுதம் காம்பீரை அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது சம்மந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த கவுதம் காம்பீர் பாஜகவில் சேர்ந்து 2019 எம்.பி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.