அமாவாசை என்றால், இருள் சூழ்ந்த நாள் என்று கூறலாம். இந்த உன்னதமான நாள் குல தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாகும்.
அமாவாசை நாளில், விரதம் கடைப்பிடித்து, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை நாளன்று நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்ககளை சென்றடையும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் அனைத்தும் நமக்கும் வந்துசேரும். நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் வந்தடையும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் உள்ள இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
amavasai andru seiya kudathavai
வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமென்றாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் முன்னோர் வழிபாட்டை மட்டும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிதுர்காரகனாகிய சூரியனும், மாதுர்காரகனாகிய சந்திரனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசியை பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை அடையும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் பிரச்சனை போன்ற தொல்லைகளை விலக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
நம் பித்ருக்கள் சக்தி அதிகம் உள்ளவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் உண்டாகும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்து கொண்டிருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் அஸ்தமனமாவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணம் கொடுக்க பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் சிறந்தது. தர்ப்பணம் கொடுக்கும் போது தங்களின் 3 தலைமுறையின் பெயர்கள், கோத்திரம் மற்றும் குலதெய்வம் பெயர்களை கூற வேண்டும்.
அமாவாசை விரதம்
அமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று கூறப்படும் முன்னோர்களை, பெற்றோர்களை முறையே வழிபட்டு வணங்கி பிராத்தனை செய்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் முழுவதும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் சந்ததிகளுக்கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. அமாவாசை நாளில், பெற்றோர் இல்லாத கணவன் விரதம் எடுக்கலாம்.
அதேசமயம், கணவன் விரதம் இருக்கிறாரே, சாப்பிடாமல் உள்ளாரே என்று மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. கணவன் இருக்கும் போது அவர்களை சுமங்கலிகள் என்று கூறுவார்கள். சுமங்கலிகள் அமாவாசை நாளில் ஒரு போதும் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் எடுக்காமல் சாப்பிடவேண்டும். இன்னொரு விஷயம்… அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை, சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை சாப்பிட்ட பிறகுதான் சமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்னதானம்
அமாவாசை அன்று, காலையில் தர்ப்பணம் செய்யவேண்டும். காலை உணவு சாப்பிடாமல் இருக்கவேண்டும். பின்னர், நம் முன்னோருக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து, அவர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, குடும்பத்துடன் வணங்கவேண்டும். பின்னர், காகத்துக்கு சமைத்த உணவு எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து வழங்கவேண்டும். இதன் பிறகு, இலையில் உணவு சாப்பிடவேண்டும். முக்கியமாக, முன்னோரை நினைத்து 4 பேருக்காவது உணவு அளிக்க வேண்டும். இது, இருப்பதிலேயே மிகப்பெரிய புண்ணியமாகும்.
முன்னோர்கள் ஆசி பெரும்
இந்தநாளில், நாம் முன்னோரை நினைத்துச் செய்கிற அனைத்து காரியங்களும் 3 மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். மாலையில் கட்டாயம் விளக்கேற்றவேண்டும். மீண்டும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் இறைவனையும், முன்னோர்களையும் வணங்க வேண்டும். அதேபோல், அமாவாசை அன்று இரவு தர்ப்பணம் செய்த கணவருக்கு உணவாக டிபன் தான் கொடுக்கவேண்டும். மனைவியானவர், டிபனே சாப்பிட்டாலும் சிறிது கைப்பிடியேனும் சாதம் சாப்பிடவேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது தான், மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் முற்றிலும் மருமகளுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
என்ன சாப்பிடக்கூடாது
அமாவாசை அன்று, ஒவ்வொரு வீட்டு வாசலிலும், எள் தண்ணீர் பெற வேண்டி முன்னோர்கள் நின்று கொண்டு காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய நாளில் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் உண்ணக்கூடாது பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது. அன்றைய நாளில் யாரையும் கோபமாக பேசக்கூடாது.
கோலம் போடக்கூடாது
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை நாளிலில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோரை வழிபட்ட பின்புதான் தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உண்டானது என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் உள்ளவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காகத்திற்கு சாதம்
அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து, காகம் சாப்பிட்டப்பிறகு தான் எல்லோரும் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளன. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பது ஆகவும், அது யமனின் தூதுவன் எனவும் சொல்லப்படுகிறது. காகத்துக்கு சோறு வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் சாந்தமாகி நமக்கு ஆசி தருவார்கள் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. காகம் சாதத்தை சாப்பிடவில்லை என்றால், ஏதோ மனக்குறை முன்னோர்களுக்கு உள்ளது என கருதுவது மக்களின் நம்பிக்கை.